Sunday, May 24, 2020

அழிஞ்சில் கொன்றை வாழ்க்கை

திருமணம் முடிந்து இரண்டு வாரத்தில் கொரோனா தொற்றால் நாடு முழுவதும் முடங்கியது. நல்லவேளையாக நாங்கள் குக்கூ பள்ளிக்கு அருகில் எடுத்திருக்கும் வீட்டிற்கு வந்து சேர்ந்த பொழுது இந்த முடக்கம் துவங்கியது. ஒவ்வொரு நாளும் அலுவலக வேலையை முடித்துவிட்டு குக்கூ விற்கு மாலை சென்று விடுவோம். வேலை செய்த அலுப்பு தெரியாமல் இரவு அங்கு வரும் தென்றல் காற்றும், வான் நட்சத்திரங்களும், ஜவ்வாது மலை காடும் அதன் உயிரினங்களின் ஒலியும் என்னை மீட்டெடுத்து விடும்.

இரவு கொசுவில்லாமலும், நாய்களின் சத்தத்துடனும் உறங்கிப் போவேன். இங்கே எனக்கு மின்விசிறி, கொசுவத்தி என்றும் எதுவும் தேவைப்பட்டதில்லை.

காலையில் சேவலின் சத்தத்தை கேட்டு தான் தூக்கங்கலைந்து எழுவேன் . கடிகாரம் அலாரம் தேவையேயில்லை. கண்ணை விழித்தால் சுற்றிலும் நன்றாக விடிந்திடாத மங்கலான வெளிச்சத்தில் பச்சை மரங்கள் சில நேரத்தில் செஞ்சிவப்பு நிறத்தில் தெரியும். அருகே இருக்கும் அழிஞ்சில் பழ மரத்தில் மரம்கொத்தியோ, குயிலோ, பெயர் தெரியாத பறவையோ பாடிக் கொண்டிருக்கும்.



இப்படி நாள் தொடங்கி இயற்கையோடு இணைந்தே நாள் முழுவதும் நகரும். அங்கே இருக்கும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது தான் மிக பிடித்த வேலையாக செய்வேன்.ஒரு செடி வாடியிருந்தாலும் மனது கிடந்து அடித்துக்கொள்ளும். அதை முடித்து அப்படியே நடந்து வளர்ந்து நிற்கும் மரங்களுடன் பேசிக் கொண்டே காட்டின் அருகில் உட்கார போட பட்டிருக்கும் கல்லில் உட்கார்ந்து ஒரு அரை மணி நேரம் அந்த நிலத்தையும் அங்கு வரும் மயில்களையும், குறைந்தது 15 வகையான பறவைகளையும், பூக்களையும் பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பேன்.



விடுமுறை நாளென்றால், அப்படியே காட்டுக்குள் நடந்து வர சென்று விடுவேன். அங்கே வெட்டப்படும் மரங்களை பார்க்கும்போது மனது வலித்தெடுக்கும். வெட்டப்படும் மரங்களை பார்க்கும்பொழுது தாயின் ஒவ்வொரு உறுப்பாய் அறுத்து எடுப்பது போன்றே தோன்றும். கிளைகள் வெட்டிக்கிடப்பது நாம் பால் குடித்த அன்னையின் மார்பை வெட்டி எறிந்ததாகவே தோன்றுகிறது. காட்டுடன் ஒரு உறவு இருப்பதாகவே உணர்கிறேன். ஏதோ ஒன்று என்னை அழைப்பதாகவும், தன் வலியையும் மகிழ்ச்சியையும் என்னுடன் பகிர்வதாவே தோன்றும். ஒரு பெரிய செயல் காத்திருப்பதாகவே ஒவ்வொருமுறையும் உணர்கிறேன்.



சித்திரை ஒன்று கொன்றை பூ பூக்கும். ஆனால் இந்த வருடம் குக்கூவில் இருந்த கொன்றை பூக்கவில்லை. மஞ்சள் நிறத்தில் அவ்வளவு வசீகரத்துடன் இருக்கும். எங்கள் பெங்களூரு அலுவலகத்தில் கேட் 1 ல் உள்ளே போகும்போது வரிசையாய் கொத்து கொத்தாய் பூத்து வரவேற்கும். அந்த நினைவுடன் இங்கே இருக்கும் கொன்றையும் பூக்குமென்று பார்த்துக்கொண்டிருந்தேன்.


அது என்னை ஏமாற்றவில்லை. பூத்து சிரித்து என்னுடன் உரையாடியது. கட்டிலடங்கா மகிழ்ச்சி. அங்கே இருக்கும் பறவைகளுடன் பேசிக்கொண்டும், பாதாம் மரத்திலிருந்து விழும் பழங்களை பொறுக்கி உள்ளே இருக்கும் பருப்பு உடையாமல் எடுத்து சாப்பிடுவதும், பறவைகளை அடையாளம் காண்பதும் என்று முழு நாளும் மகிழ்ச்சியாய் ஓடும்.



அழிஞ்சில் பழங்களை முதன் முதலில் நான் இங்கே தான் பார்க்கிறேன். எனக்கு பிடித்த இளஞ்சிவப்பு நிறத்தில் சிறியதாய் இருக்கும். உள்ளே வெள்ளி நிறத்தில் இருக்கும். நன்றாக பழுத்த பழத்தை தோலை பிதுக்கி உள்ளே இருக்கும் ஊணை சாப்பிட வேண்டும். துவர்ப்புடன் இனிப்பு கலந்த சுவை. அதன் நிறமே என்னை தூண்டும்.

இப்படியெல்லாம் வாழும் வாழ்க்கை தான் வரம். வாழ்க்கை வாழ்வதற்கே.

இன்னும் சொல்ல ஆயிரமிருக்கிறது. அன்றாடத்துடன் வருகிறேன்.