Saturday, August 15, 2020

காந்தியின் இறுதி நாட்களுடனான என் பயணம் - ஆகஸ்டு 12,1947. நாள் - 172

ரத்ததாலும் கண்ணீராலும் நிறைந்து மிகப் பெரிய சோகக் கடலாக காட்சியளித்தது கல்கத்தா. அத்துமீறிய வன்முறைகள் கட்டுக்கடங்காமல் தறிகெட்டு நடந்தேறியது. இவை அனைத்தும் நம்ப முடியாத ஒரு கூட்டு முயற்சிக்கு வழிவகுத்தன. இந்த கூட்டு முயற்சியில் முதல் உறுப்பினர் காந்திஜி. மற்றொருவர் எச்.எஸ்.சுராவர்தி. ஊறிப்போன ஒரு முஸ்லீம் லீகர். இரண்டு தேசக் கோரிக்கைத் தலைவரான முகமது அலி ஜின்னாவின் தீவிரமான சீடர்.

கல்கத்தாவில் வகுப்புவாத நோய் வேகமாக பரவி வந்த நேரத்தில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி சுராவர்தி உள்ளிட்ட முஸ்லீம் லீக் கட்சியினர் அனைவரும் கராச்சியில் இருந்தனர். பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அனுமதிக்கப் பட்டு இந்திய பிரிவினையை வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் வேகமாக செயல்படுத்தினார். பாகிஸ்தானுக்கு ஒரு தனி அரசியல் அமைப்புச் சட்ட அவை அமைக்கப் பட்டிருந்தது. சிந்து மாகாணத்தின் தலைநகரான கராச்சி தான் புதிய முஸ்லீம் தேசத்தின் தாற்காலிகத் தலைநகராகத் தீர்மானிக்கப் பட்டிருந்தது.

இந்தியப் பிரிவினையை எதிர்த்துப் போராடி வந்த காந்திஜிக்கு இது தாங்க முடியாத துயரத்தை அளித்தது. மகிழ்ச்சியும் ஆரவாரமும் பாராட்டுகளும் கொண்ட நிகழ்சசியில் கலந்து கொள்வதற்காகத் தான் சுராவர்தி கராச்சி சென்றிருந்தார். வங்காள மாகாணத்தின் முஸ்லீம் லீக் முதலமைச்சர் என்ற வகையில் கலந்து கொண்டு புதிய உறுப்பினர் பதிவேட்டில் கையெழுத்திட்டார்.

சுராவர்தி காந்திஜிக்கு நேர் எதிரானவர். ஆடைகளில், பழகுவதில், உணவுப் பழக்க வழக்கங்களில், வாழ்க்கை முறையில் என அனைத்திலும் இருவரும் நேர் எதிரானவர்கள். முன்பின் அறியாத ஒரு பரிசோதனை ஏற்பாட்டுக்கான முன்முயற்சியை முதலில் எடுத்தவர் காந்திஜிதான். தானும் சுராவர்தியும் பதட்டம் நிறைந்த கல்கத்தாவில் ஒரே வீட்டில் தங்குவதாகவும் இரண்டு நாள் கழித்து காந்திஜி நவகாளிக்கு புறப்படுவார் என்ற  செய்தியும் கராச்சியில் இருந்த சுராவர்தியை எட்டியது.

இரண்டே நாட்களில் அவசர அவசரமாக சுராவர்தி கல்கத்தாவிற்கு பறந்து வந்தார். ஆசிரமத்திற்கு வந்த சுராவர்தி காந்திஜியிடம் இன்னும் சிறிது காலம் கல்கத்தாவிலேயே தொடர்ந்து தங்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இவ்வாறு கேட்டவரிடம் காந்திஜி "என்னை நவகாளிக்கு செல்லாமல் தடுப்பதற்காகவே அங்கிருந்து விரைந்து வந்தீர்களா? அதுதான் உங்கள் நோக்கமா?" என்று கேள்வி எழுப்பினார். 

இந்த கேள்விக்குப்பின் ஒரு காரணம் இருந்தது. முஸ்லீம் லீகின் திட்டமிட்ட செயல்களால் தான் நவகாளியில் வன்முறை ஏற்பட்டிருந்தது. இந்த முக்கியத் திட்டத்தை செயல் படுத்துவதில் சுராவர்தி முக்கிய பங்காற்றியிருக்கிறார். பாகிஸ்தானில் சேரவிருந்த வங்காள பகுதிகளில் தீ வைப்பது, இந்துக்களை கொல்வது, கற்பழிப்பு, சூறையாடல், கட்டாய மதமாற்றம், இளம் இந்து பெண்களை முஸ்லிம்களுக்கு திருமணம் செய்து வைப்பது போன்ற நடவடிக்கைகள் நடைபெற்று வந்தன.

பிரதமர் சுராவர்தியின் அரசு இதை கண்டும் காணாமலும் ஒதுங்கி வன்முறைக்கு வழிவகுத்தது. இந்த வன்முறை சூழலை கண்டு இந்துக்கள் வீடுகளை விட்டு வெளியேறி விடுவார்கள். இவ்வாறு அவர்கள் வெளியேறிவிட்டால் பாகிஸ்தானுக்காக ஒதுக்கப் பட்ட பகுதிகள் முஸ்லிம்கள் மட்டும் வாழும் தூய்மையான பகுதியாக மாறிவிடும். இதனை மனதில் வைத்து தான் நவகாளியில் இவ்வளவு வன்முறைகள் நடந்தேறியது.

கல்கத்தாவிலேயே தங்கி அங்கு அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று சுராவர்தி வேண்டினார். இரண்டு விஷயங்களுக்கு பிரதமர் சுராவர்தி ஒப்புக்கொண்டால் அவரது வேண்டுகோளை ஏற்பேன் என்று காந்திஜி கூறினார். முதல் விஷயம் கல்கத்தாவில் அமைதியை நிலைநாட்டுவதற்கு தனது அனைத்து முயற்சிகளுக்கும் அவர் ஒத்துழைக்க வேண்டும். அதே நேரத்தில் நவகாளியில் எந்தவித அசம்பாவிதங்களும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு சுராவர்தியும் மற்ற முக்கிய முஸ்லீம் லீக் தலைவர்களும் முழுமையான உத்திரவாதத்தினை அளிக்க வேண்டும் என்று இரண்டாவது கோரிக்கையை வைத்தார்.

அதில் கலவரம் நிறைந்த கல்கத்தாவின் மையப் பகுதியில் ஒரே குடிசையில் இருவரும் எந்தவித போலீஸ் பாதுகாப்போ மற்ற பாதுகாப்போ இன்றி தங்க வேண்டும் என்பதும் அடக்கம். இவ்வாறு ஒரு தீர்வை, முயற்சியை எடுக்க அந்த மஹாத்மாவால் தான் முடிந்தது. அவரின் தைரியத்திற்கும் அன்பிற்கும் முன்னால் எந்தத் தடையும் விலகிவிடும்.