Monday, August 10, 2020

காந்தியின் இறுதி நாட்களுடனான என் பயணம் - ஆகஸ்டு 05,1947. நாள் - 179

அபா மற்றும் மனுகாந்தியின் தோள்களில் கையை வைத்தவாறு பல மணி நேரமாக காத்து நின்று கட்டுக்கடங்காத கூட்டத்திற்கு இடையே மேடையை நோக்கிச் சென்றார் காந்திஜி. ஆனால் அவர் மனது முழுவதும் ஸ்ரீநகரில் பல்வேறு மக்களுடன் நடந்த உரையாடல்களையே சுற்றிச் சுற்றியே வந்தது. காந்திஜியை சந்தித்தவர்கள் பல்வேறு தரப்பட்ட மக்களாய் இருந்தாலும் அவர்கள் வலியுறுத்தியது இரண்டு விஷயங்களைத் தான். 

ஒன்று சுதந்திர போராட்ட வீரரான ஷேக் அப்துல்லாவை விடுதலை செய்வது. மற்றொன்று பிரதமர் ராமச்சந்திர கக் விரைவில் மாற்றப் பட வேண்டும் என்பது. காந்திஜி இது குறித்து தன்னால் எதுவும் செய்ய முடியாது என்றும் தான் ஒரு அரசியல் தூதுவராக இந்த காஷ்மீர் பயணத்தை மேற்கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டார். ஆனால் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவது அவர்களில் கையில் தான் இருக்கிறது என்றும் மக்களின் குரலையும் சக்தியையும் தாண்டி வேறு எந்த வலுவான சக்தியும் இல்லை என்று கூறினார்.

ஆகஸ்ட் 15 நெருங்குகிற நிலையில் காஷ்மீரின் நிலை என்ன என்பதை தெரிந்து கொள்ள ஜம்மு மக்கள் விரும்பினர். காஷ்மீருக்கு என்ன நிகழும் என்பது காஷ்மீர் மக்களாகிய உங்களை பொறுத்து தான் இருக்கிறது என்று காந்திஜி தெரிவித்தார். ஜம்மு பெரிய அளவில் இந்து மக்களை கொண்டு இருந்தாலும் முஸ்லீம்கள் ஸ்ரீநகரைப் போலவே இங்கும் ஷேக் அப்துல்லா சிறையில் இருப்பது பற்றி கொந்தளிப்பில் இருந்தனர். எங்கள் தலைவர் சிறையில் இருக்கும்போது நாங்கள் என்ன செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பினர்.


தலைவர் மக்கள் மத்தியில் இல்லையென்றாலும் தன் மக்கள் ஆதரவற்றவர்களாக, நம்பிக்கை இழந்தவர்களாக உணரும் மனப்பான்மை கொண்டவர்களாக மக்களை ஒரு சிறந்த தலைவர் வளர்க்கமாட்டார். தலைவர் தான் முன்னடத்தி செல்பவர். ஆனால் தன்னைப் பின்பற்றுபவர்களின் திறமைமிக்க பிரதிநிதியாகத்தான் அவர் வழிநடத்திச் செல்வார். ஒரு தலைவர் எவ்வளவு மகத்தானவராக இருந்தாலும் அந்த ஒரு மனிதரையே சார்ந்து நிற்கும் போக்கிலிருந்து மக்கள் விலகிச் செல்ல வேண்டும். வலிமைமிக்க தங்களுடைய சொந்த கால்களில் நிற்பதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினார் காந்திஜி.

மாபெரும் தலைவர்கள் ஆனாலும் மக்கள் தலைவர்கள் இல்லாமலே அவரின் கொள்கைகளை பின்பற்றவும் தங்கள் உரிமைக்காகவும் தொடர்ந்து போராடவும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினார் காந்திஜி. 

அரிஜன் பத்திரிகைக்காக ஒரு கட்டுரையை எழுதினார். விடியும் முன்னமே தானும் தன் பயணக்குழுவும் கிளம்பி ராவல்பிண்டிக்கு பயணத்தைத் தொடங்கினர். சில மணி நேரத்தில் ராவல்பிண்டிக்கு அருகில் உள்ள பஞ்ச சாகேப் என்ற இடத்தைச் சென்றடைந்தனர். சீக்கியர்கள் மிகுந்த பக்தியுணர்வுடன் வழிபாட்டு வந்த ஒரு குருத்வாரா பஞ்சாசாகேபில் அமைந்திருந்தது.

இந்தியாவை பிரிவினை செய்வது என்ற முடிவினால் மிகவும் மோசமான முறையில் பாதிக்கப்பட்ட ஒரு சமூகமாக சீக்கிய சமூகம் ஆக்கப்பட்டிருந்தது. வயது பாராபட்சம் இல்லாமல் அனைத்து வயது சீக்கியர்களும் அந்த கோவிலில் காந்திஜியை தரிசிக்க குழுமியிருந்தனர். காந்திஜிக்கு உரிய மரியாதையுடன் அவர்களின் குருமார்கள் வரவேற்றனர்.

சீக்கியர்களின் கோவில்கள் ஏற்கனவே இரண்டு முறை தாக்கப்பட்டு இருந்தது. தாங்கள் ஒரு தீவில் இருப்பது போலவும் தங்களை சூழ்ந்து வரும் தீமைகளிலிருந்தும், பேரழிவிலிருந்தும் காத்துக் கொள்வதற்கு காந்திஜியின் ஆலோசனையை வேண்டினர். இது போன்று மீண்டும் நிகழாமல் இருக்க அவர்கள் சில கோரிக்கைகளை முன் வைத்தனர். அதில் ஒன்று கிழக்குப் பஞ்சாபின் எல்லைகளை வரையறுத்து அதனை சீக்கியர்கள் வாழ்வதற்கான தனியிடமாக ஒதுக்குவது. அவ்வாறு செய்தால் தாங்கள் நிம்மதியுடன் வாழ்வார்கள் என்று கூறினார்.

அதனை கண்டித்த காந்திஜி இது சரியான கோரிக்கை அல்ல என்று கூறினார். மதமோ, அல்லது வேறு எதுவுமே எந்தவொரு அரசாங்க பதவி வகிப்பதற்கான ஒரு அடிப்படையாக இருக்கக் கூடாது என்றார். தங்களுடைய புனிதத்தலங்களுக்கு ஏற்படும் பிரச்சனை குறித்து காந்திஜி "அவற்றை பாதுகாக்க உங்களுக்கு வெளியில் இருந்து வேறு எவரோ வர வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். உங்கள் எதிர்காலம் பற்றிய அச்சத்தை ஒதுக்கி வையுங்கள். உங்களுடைய நம்பிக்கையை பாதுகாக்க உறுதியுடன் செயல்படுங்கள். நீங்கள் பயந்தபடியே முஸ்லீம்கள் உங்கள் கோவில்களை அழிக்க முயற்சி செய்வது இஸ்லாமிய பாரம்பரியத்திற்கு முரணானது." என்று அவர்களுக்கு நம்பிக்கை வார்த்தைகள் கூறினார்.

காந்திஜி என்றும் மக்களை தங்கள் நம்பிக்கைக்காக போராடச் செய்தார். தலைவன் இல்லாமலும் மக்கள் தங்கள் அற வழியில் முன்னேற்றத்தை நோக்கி செல்ல வேண்டும் என்று நினைத்தார். இன்றும் காந்தியத்தை கடைபிடிப்பவர்கள் காந்திஜி இல்லை என்று வருந்தாமல் தங்கள் சேவையை காந்தியின் வழியில் தொடர்கின்றனர் என்பது தான் அவரின் வெற்றி.

No comments:

Post a Comment