Tuesday, August 11, 2020

காந்தியின் இறுதி நாட்களுடனான என் பயணம் - ஆகஸ்டு 06,1947. நாள் - 178

நேற்று சிறிதும் ஓய்வின்றி பயணிக்க வேண்டியிருந்தது. ஜம்முவிலிருந்து, பஞ்சாசாகேப், அங்கிருந்து வாவிற்கு, அங்கிருந்து ராவல்பிண்டிக்கு, பின் லாகூருக்கு என பயணம் உடலை அழுத்தியது. அவர் ஒரு துறவியைப் போல மிகுந்த சுயகட்டுப்பாடு, உணவுப் பழக்கம், இயற்கை வைத்திய முறை என்று அனைத்தையும் பின்பற்றினார். அதனால் தான் 50 கிலோ உள்ள அவரது மெலிந்த உடல் அவர் செய்த அனைத்து வேலைகளுக்கும் ஒத்துழைத்து இன்றும் அவரை இயங்கச் செய்கிறது.

அதற்கு அவர் வாழ்க்கை முறையே காரணம். அவரின் ஓய்வு அழிச்சல் அற்ற வேளையில் பாதியை நிறைவேற்றியிருந்தால் கூட அவர்களுக்குக் காந்திஜிக்கு ஏற்பட்ட களைப்பைப் போல் இரண்டு மூன்று மடங்கு அலுப்பும் களைப்பும் ஏற்பட்டிருக்கும்.  அவர் பஞ்சா சாகேப்பிலிருந்து கிளம்பி ராவல் பிண்டி, வா மற்றும் லாகூர்  என செல்லும் இடமெல்லாம் பல ஆயிரக்கணக்கான ஆதரவற்ற ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் அடைந்த துன்பங்களை பார்த்து மனதளவில், உடலளவில் சோர்வடைந்திருந்தார். 

எங்கும் பரவிக் கிடக்கின்ற வகுப்புவாத வன்முறைகளுக்கு ஆளாகி இருந்த மக்கள் அனைவரும் சுக்குநூறாய் உடைந்து போயிருந்தனர். காந்திஜி அவர்களுக்கு நடந்த அனைத்தையும் தனக்கு நடந்தாகவே உணர்ந்து துன்பப்பட்டார். அவர் கண்ட காட்சிகளை அவரால் நம்ப முடியவில்லை. 30 ஆண்டுகளாக இந்து முஸ்லீம் ஒற்றுமை என்ற லட்சியத்துக்காக மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைத்தவர் காந்திஜி. அவர் ஆற்றி வந்த பணிகள் அனைத்தும் தம் கண்ணெதிரே அழிந்து போனதை பார்க்க நேர்ந்தது. அவர் மீண்டும் மீண்டும் கேட்ட இரக்கமற்ற நிகழ்வுகள் அவரது வாழ்நாள் லட்சியம் தோல்வியடைந்ததை தான் குறிக்கின்றது. அதனை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

நன்மை நடந்த நேரத்திலும் மோசமான சூழ்நிலைகளிலும் தடுமாற்றமின்றி சீரான முறையில் இயங்க முயற்சித்தார். என்றாலும் அவரது லட்சியத்தை முழுவதுமாய் அடைய முடியவில்லை. சிறிதளவும் அஞ்சி நடுங்காமல் சாதாரணமான முறையில் எல்லாவற்றையும் அவரால் ஏற்றுக் கொள்ள முடிந்தது. ஆனால் பிறரின் சோகமத்தையும் துன்பத்தையும் பார்த்து அவரால் ரத்தக் கண்ணீர் விடாமல் இருக்க முடியவில்லை.


பஞ்சாசாகேப் நிகழ்வுகள் அவரை நிலைகுலையைச் செய்திருந்தன. வா(wah) எனும் இடத்தில் அகதிகள் முகாமில் 9000 சீக்கியர்களும் இந்துக்களும் தங்கியிருந்தனர். அவர்களின் சோகக் கதைகளை கேட்டறிந்தார். அன்று மாலை பிரார்த்தனை கூட்டத்தில் காந்திஜி பேசினார். "ஆகஸ்ட் 15 ஆம் தேதி நெருங்குவதை நினைத்து இந்துக்களும் சீக்கியர்களும் அச்சப்படத் தேவையில்லை. பாகிஸ்தான் அமைக்கப்படும் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இப்பொழுது முஸ்லீம்கள் சண்டையிடுவதற்கு எந்த காரணமும் இல்லை. இங்குள்ள மாவட்ட ஆணையர் ராவல்பிண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அகதிகள் அச்சப்படத் தேவையில்லை என்று கூறியுள்ளார். அதனால் உங்கள் அச்சங்களை தூக்கியெறியுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.

தான் நவகாளிக்கு செல்ல வேண்டியிருக்கிறது என்றும் வா-பகுதி மக்களுக்கு தங்கியிருந்து உதவி செய்வதற்காக தனது நம்பிக்கைக்குரிய சகா டாக்டர் சுசீலா நய்யாரை விட்டுச் செல்வதாக காந்திஜி கூறினார். இன்று நடந்த காங்கிரஸ் ஊழியர்கள் கூட்டத்தில் "தனது மிச்ச வாழ்நாளை பாகிஸ்தானில் கழிக்கப் போவதாகவும், அது கிழக்கு வங்காளமாகவோ அல்லது மேற்கு பஞ்சாப் அல்லது வடமேற்கு எல்லை மாகாணமாகவோ இருக்கலாம்." என்று கூறினார்.

"என்னுடைய இதயம் எப்பொழுதும் இங்கே பஞ்சாபில் தான் இருந்து வருகிறது. உங்களுடைய மாகாணத்தை மறந்துவிட்டேன் என்று நினைக்க வேண்டாம். ஆனால் நான் இப்போது இருக்க வேண்டிய இடம் நவகாளி. நான் அங்கு செல்வதால் இறந்தாலும் பரவாயில்லை. அங்கு செல்வேன். அங்கு எனது பனி முடிந்தவுடன் நான் இங்கு மீண்டும் வருவேன் என்று உறுதியளிக்கிறேன்." என்று ஆறுதல் கூறினார். அவர்களுக்கு தைரியத்தையும் அவர்களின் வீரத்தையும் நினைவூட்டினார்.

அவர் வழக்கம் போல் செய்தித்தாள்களை வாசித்தார். பின் கடிதங்களை படித்து அதற்கு பதில் எழுதினார். ஜவஹர்லால் நேருவிற்கு அவர் எழுதிய கடிதத்தில் ஸ்ரீநகர் பிரதமர் கக் எவ்வளவு கெட்ட பெயர் ஈட்டியுள்ளார் என்பதை அவரிடம் வெளிப்படையாக தெரிவித்ததை கூறியிருந்தார். இந்த கடிதத்தை வல்லபாய் பட்டேலிடம் காட்டுமாறும் கேட்டிருந்தார். காஷ்மீர் மஹாராஜா தனது பிரதமரைக் கழட்டி விட நினைப்பதாகவும் காந்திஜி கருதினார். இது குறித்து பட்டேல் ஏதாவது செய்ய வேண்டும் என்றும் "அதன் மூலம் காஷ்மீரை இப்போது கூட பாதுகாக்க முடியும்" என்றும் எழுதியிருந்தார்.

No comments:

Post a Comment