Thursday, August 13, 2020

காந்தியின் இறுதி நாட்களுடனான என் பயணம் - ஆகஸ்டு 08,1947. நாள் - 176

லாகூரிலிருந்து பாட்டனாவிற்கு காந்திஜியும் அவரது குழுவும் மூன்றாம் வகுப்பு ரயில் பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அன்றைய தினம் வறட்சி மிகுந்த வடநாட்டில் மழைகொட்டியது. காந்திஜி இருந்த பெட்டியில் பல இடங்களில் இருந்த கூரையின் ஓட்டைகளால் மழை நீர் உள்ளே புகுந்தது. பெட்டியில் குட்டை போல் மழை நீர் தேங்கி தானும் அவர்களுடன் பயணம் செய்வேன் என்று அடம் பிடித்தது.

குழுவைச் சேர்ந்த ஒருவர் சென்று ரயிலின் கார்டை சந்தித்து புகார் கூறினார். அவரும் பஃத்தியுடன் ஓடிவந்து அவர்களுக்கு வேறொரு பெட்டியை ஏற்பாடு செய்து தருவதாக கூறினார். அதனால் ரெயில் சிறிது கூடுதலான நேரம் நின்றாலும் பரவாயில்லை என்று கூறிய காந்திஜி "எங்களுக்கு புதிய பெட்டி அளித்த பின் இந்தப் பெட்டியை என்ன செய்வீர்கள்" என்று கேட்டார். 

இந்த பெட்டியை மற்ற பயணிகள் பயன்படுத்திக் கொள்ள அனுமதி தருவோம் என்றார். அதற்கு காந்திஜி "மற்ற பயணிகளுக்கு இந்த ஒழுகும் பெட்டி போதும் என்றால் எங்களுக்கும் இந்த ஒழுகும் பெட்டியே போதும்" என்று கூறியது அவரை திகைப்படைய வைத்தது. அந்த அலுவலர் காந்திஜியிடம் தன்னை ஆசிர்வதிக்குமாறு வேண்டினார். அவரிடம் "பயணிகளை அன்புடன் நடத்துங்கள். அவர்களிடம் லஞ்சம் பெறாதீர்கள். ஏழைப் பயணிகளை தொல்லை செய்யாதீர்கள். அதுதான் நீங்கள் செய்யக் கூடிய மிகச் சிறந்த பணியாகும்." என்று ஆசிர்வதித்தார். 

அரை நூற்றாண்டுக்கு முன்னர் இது மாதிரியான ஒரு ரயில் நிலையத்தில் அவரை நிறவெறியால் ரயிலிருந்து வெளியே தூக்கியெறியப்பட்டது தான் இவை அனைத்துக்குமான தொடக்கமாக அமைந்தது. அதன் பிறகு இந்தியாவிலும் தென் ஆப்பிரிக்காவிலும் மிகப் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தாலும் அதற்காக காந்திஜியும் அவரின் குழுவும் நிறைய துன்பங்களை அனுபவித்துள்ளனர். அவரின் நீண்ட கசப்பான போராட்டங்கள் தான் மிகப் பெரிய மாற்றங்களை மிகக் குறுகிய காலத்தில் ஏற்படுத்தியது.

ஆனால் அவர் வா முகாமில் தங்கியிருந்தவர்கள் அனுபவித்த துன்பங்களை நேரில் கண்டதும் மிகப் பெரிய துயரத்திற்கு உள்ளாகியிருந்தார். குறிப்பிட்ட கால இடைவெளியில் மனித சமூகம் மிருகத்தனத்தை நோக்கு பின்னோக்கிச் செல்வது அவர் நெஞ்சைப் பிழிந்தது. இது போன்று நிகழ்வதை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியே அவர் சிந்தித்துக் கொண்டிருந்தார். அதற்காக அவர் இளைஞர்களை சரியான வழியில் வளர்த்தெடுப்பதன் மூலம் இந்தியாவின் எதிர்காலத்தை மட்டுமல்ல உலகின் எதிர்காலத்தையும் மாற்ற முடியும் என்று தீவிரமாக நம்பினார்.

மழை நீரின் குளிருக்கு ஓரமாக ஒதுங்கி அமர்ந்து கொண்டு ஹரிஜன் இதழுக்கு கட்டுரை ஒன்றை எழுத ஆரம்பித்தார் மகாத்மா. தேசத்தின் வளர்ச்சியில் மாணவர்கள் பங்கேற்க அடித்தளமாக ஒரு தேசிய மாணவர் மாநாட்டைக் கூட்ட வேண்டும் என்று சிலர் வைத்திருந்த கோரிக்கையைப் பற்றி அவர் தனது கட்டுரையில்  குறிப்பிட்டிருந்தார். 

"மனித குலத்தின் எதிர்காலத்தை உருவாக்குபவர்கள் மாணவர்களே. அவர்களைப் பிரிவினை செய்ய முடியாது. நான் வருத்தத்துடன் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். அவர்கள் தாங்களாகவே சிந்திக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். அல்லது அவர்களின் தலைவர்கள் அவர்களை படிக்கவிடுவதில்லை. அவ்வாறு அனுமதித்திருந்தால் அவர்கள் நல்ல குடிமக்களாக வளர்ந்திருப்பார்கள். 


அந்நிய அரசாங்கம் ஏற்பட்ட காலத்திலிருந்தே இந்தச் சீரழிவு துவங்கிவிட்டது. நாமும் அந்தத் தவறுகளை சரி செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அரசியல் அமைப்புகள் மாணவர்களை வலைபோட்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களும் அதில் சிக்கிக் கொள்கின்றனர்.எனவே ஒரு மாணவர் அமைப்பை உருவாக்குவது என்பது மிகவும் கடினமானது. தனது கடமையிலிருந்து விலகாத ஒரு உணர்வே மாணவர்களுக்குத் தேவை. அதன் பிறகே மாணவர்களை ஒரு அணியில் சேர்ப்பதற்கான வாய்ப்பு உருவாகும். 

நேரடி அரசியலில் ஈடுபடுவதை மாணவர்கள் தவிர்க்க வில்லை என்றால் இது சாத்தியமில்லை. தீர்வு காணப்பட வேண்டிய பல பிரச்சனைகளை ஆய்வு செய்வது மாணவனின் கடமையாகும். தனது படிப்பை முடித்தபிறகு தான் செயல் பட வேண்டிய காலம் வரும்." என்று மாணவர்களின் எதிர்காலம் குறித்து நாம் செயல்பட வேண்டியவை பற்றி காந்திஜி எழுதியிருந்தார். மாணவர்கள் பழமையில் ஊரித் திளைத்து முதியவர்கள் மட்டுமே செயல் பட வேண்டும் என்று எண்ணிக் கொள்ளக் கூடாது என்றும் கூறினார்.

சோம்பேறித்தனத்துக்கும், கெட்ட பழக்கங்களுக்கும் ஆட்பட்டுவிடும் மாணவர்களுக்கு "எளிய வாழ்க்கை முறை, உயர்ந்த சிந்தனை கொண்டவர்களாக மாணவர்கள் இருக்க வேண்டும். அவனது படிப்பிலிருந்து இன்பம் பெறுபவனாக இருக்க வேண்டும். அறிவு பெற்ற நிலையிலிருந்து மேலும் சிறந்த அறிவை நோக்கி முன்னேறுவபவனாக இருக்க வேண்டும்." என்று தன் எண்ணத்தை கூறினார். 

இன்று பாட்னா வந்து சேர்ந்திருந்தார் காந்திஜி. அவர் "இயற்கையான எளிமையான வாழ்க்கையை வாழுங்கள். சிறுபான்மை மக்களின் நலன்களை பாதுகாத்திடுங்கள். கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களில் ஒருவராக வாழுங்கள். மதுவிலக்கை அமல் படுத்துங்கள்." என்று பீஹார் கவர்னராக பொறுப்பேற்க இருக்கும் திரு ஜெய்ராம் தாஸ் அவர்களுக்கு எழுதியிருந்தார்.

மாலை பிரார்த்தனையில் "பிரிவினைக்கும், நம்பிக்கையின்மைக்கும் வெறுப்புக்கும் அன்பு ஒன்று தான் மிகச்சசிறந்த பதில்" என்று கூறினார்.

No comments:

Post a Comment