Friday, August 7, 2020

காந்தியின் இறுதி நாட்களுடனான என் பயணம் - ஆகஸ்டு 02,1947. நாள் - 182

நேற்றைய தினம் மகாத்மாவின் பயணக்குழு கோஹாலாவிலிருந்து ஸ்ரீநகர் நோக்கி தங்கள் பயணத்தை தொடங்கி இருந்தனர். ஸ்ரீநகர் சென்றடைய 35 மைல் பயணம் பாக்கியிருந்த நிலையில் காஷ்மீர் பள்ளத்தாக்கின் இரண்டாவது பெரிய நகரமான பாரமுல்லாவில் ஒரு அமளி ஏற்பட்டது. பாரமுல்லாவிலும் கோஹாலாவைப் போல் வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

ஆனால் நிகழ்வை சீர்குலைக்கும் வகையில் காஷ்மீர் முஸ்லீம் மாநாட்டு கட்சி ஊழியர்கள் ஆக்ரோஷமான முறையில் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பிக் கூச்சலிட்டனர். கலவர முறையில் நடந்து கொண்டனர். கட்டுப்பாடில்லாமல்  வன்முறைக் கும்பல் ஒன்று காந்திஜியை நெருங்க முயற்சி செய்தது. காஷ்மீர் ராஜ்ய போலீஸ் படையச் சேர்ந்தவர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். மகிழ்ச்சியற்ற காந்திஜிக்கு இது மேலும் வேதனையை அளித்தது.

காந்திஜி கலவரம் செய்பவர்களிடம் சென்று அவர்களின் குறைகள் என்ன என்று கேட்க விரும்பினார். அதிர்ஷ்ட வசமாக அவர் அவ்வாறு செய்ய யாரும் அனுமதிக்கவில்லை. இதைத் தான் அவர் எப்பொழுதும் செய்து வந்தார். தன்னைத் தாக்க வந்தவர்களிடம் உரையாட விரும்பினார் காந்திஜி. பிரிட்டிஷ் அரசை எதிர்த்த பொழுதும் அவர்களுடன் உரையாடிக் கொண்டே இருந்தார். ஆங்கிலேயர்களுக்கு எதிரான ஒவ்வொரு போராட்டத்தைத் தொடங்கும் போதும் அவர் அவர்களிடம் கடிதம் மூலம் தெளிவாக உரையாடினார்.

அவர் எதிரிகளிடம் கூட வெறுப்பை உருவாக்க விரும்பவில்லை. இது எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்றாக இருக்கிறது. ஆம் நம் எதிரியாய் இருந்தாலும் வெறுப்பை உருவாக்காமல் வெறுப்பில்லாமல் உரையாட வேண்டும். அது பல பிரச்சனைகளை வேரிலேயே தடுத்துவிடும் என்பது எனது புரிதல்.


மாலை 5 மணிக்கு அவரும் குழுவும் ஸ்ரீநகரை அடைந்தவுடன் வரவேற்பு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. காந்திஜியின் வழக்கமான புன்னகை அவரது முகத்தில் மீண்டும் தோன்றியது. இரு கரங்குவித்து வணக்கம் தெரிவித்தபடியே வந்து கொண்டிருந்தார்.

அவர் கிஷோரிலால் இல்லத்தில் தங்குவதாக ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. மக்கள் அவரைப் பார்க்க வந்த வண்ணம் இருந்தனர். களைப்படைந்த நிலையிலும் அவர் தங்கியிருந்த மாளிகையின் முற்றத்தில் 5 முறைக்கும் மேலாக வந்து காட்சி அளித்தார். மாலை நடை பயிற்சிக்காக 'தால்' ஏரிக்கரைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கே ஏற்பட்ட புத்துணர்ச்சியுடன் உறங்கச் சென்றார். 

இன்றைய நாள் ஆகஸ்ட் 2 ஆம் தேதி காந்திஜி அதிகாலை 3 மணிக்கே எழுந்துவிட்டார். ஏற்கனவே அவர் திட்டமிட்டபடி ஒவ்வொரு வேலைகளாய் ஆரம்பித்தார். முதலில் காஷ்மீர் பிரதமரான திரு கக் அவர்களை சந்தித்தார். இவர் மகாராஜாவின் முழு நம்பிக்கைக்கு உரியவர். பண்டித நேருவின் தீவிர எதிர்ப்பாளர். நேரு கக் அவர்களைப் பற்றி "பண்டிட் கக் என்ன உணர்கிறார், என்ன நினைக்கிறார் என்பதைக் கேட்பதற்கே அலுப்பு ஏற்படுகிறது. அவர் என்ன ஆலோசனை கூறுகிறாரோ அதற்கு நேர் எதிரான ஒன்றைச் செய்வது பொதுவாக சரியாக இருக்கும் என்று உண்மையில் நான் நினைக்கிறேன்." என்று காந்திஜியிடம் கூறியிருந்தார்.

ஆனால் இப்பொழுது காந்திஜி தான் காஷ்மீருக்கு வருகை புரிந்துள்ளார். காந்திஜி எளிதில் சீறிப்பாயும் தன்மையுடைய ஜவஹர்லால் அல்ல. பிரிட்டிஷ் அதிகாரிகள், சிறை அதிகாரிகள், பிரதமர்கள், வைஸ்ராய்கள் போன்ற பலரைப் பலகாலமாக எதிர்கொண்ட அனுபவ முதிர்ச்சி பெற்றவர் காந்தியடிகள். கடுமையாக அவரை எதிர்த்து வந்துள்ள இந்தியர்களான சுபாஷ் சந்திரபோஸ், பி.ஆர். அம்பேத்கார் போன்றவர்களிடம் கிடைத்த அனுபவங்களைக் குறிப்பிட வேண்டியதில்லை. இத்தகைய பக்குவம் வாய்ந்த காந்திஜி காஷ்மீர் பிரதமர் கக் அவர்களுடன் ஒரு மணி நேரத்துக்கு மேலான நீண்ட அமைதியான பொறுமைமிக்க உரையாடலில் ஈடுபட்டார்.

அதன்பின் பல்வேரு முக்கிய மனிதர்களை காந்திஜி தொடர்ந்து சந்தித்துக் கொண்டே இருந்தார். சிறிது ஓய்வுக்குப்பின் மீண்டும் பலருடனான சந்திப்பு தொடர்ந்து கொண்டே இருந்தது. இவ்வாறு நாட்டிற்காகவும், மக்களின் நலனிற்காகவும் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருந்தார் அந்த 77 வயது இளைஞர்.

No comments:

Post a Comment