Wednesday, August 5, 2020

காந்தியின் இறுதி நாட்களுடனான என் பயணம் - ஜூலை 31,1947. நாள் - 184

காஷ்மீர் பயணத்துக்கு முந்தைய நாளே பிரார்த்தனை கூட்டத்திற்கு வந்தவர்களிடம் பிரியாவிடை பெற்றுக்கொண்டார் நம் தேசத் தந்தை. பல ஆண்டுகளாக நடத்தி வரும் போராட்டங்களுக்கு அவர் எப்பொழுதும் ரயிலில் மூன்றாம் வகுப்புப் பெட்டியில் தான் பயணங்களை மேற்கொண்டு வந்தார். 

தானே நூற்ற நூலில் நெய்த ஆடையே அவர் என்றும் அணிந்திருந்தார். நாட்டின் ஏழை மக்களுக்கு தன் ஆதரவைத் தெரிவிப்பதற்காக அவர் என்றும் கைத்தறி ஆடை அணிவதையும், மூன்றாம் வகுப்பில் பயணம் செய்வதையும் அவர் தொடர்ந்து பின்பற்றி வந்தார். நாட்டின் கோடிக்கணக்கான  ஏழை மக்கள் ரயிலில் பயணம் செய்வதே அரிது. அதிலும் மூன்றாம் வகுப்பைத் தாண்டி பயணம் செய்வது இல்லை. அதனால் தானும் அதையே பின்பற்றினார்.

தற்சார்பு வாழ்வையும், எளிமையையும் அவர் அனைவருக்கும் போதித்தார். அதை முழுவதுமாக பின்பற்றவும் செய்தார். இன்று காந்தி, காந்தியம் என்றாலே தவறான அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆம் காந்தி என்றாலே கதர் ஆடை, கைத்தடி, வயதான தோற்றம், ரூபாய் நோட்டில் முகம் என்று தான் நம் மனதில் பதிய வைக்கப் பட்டுள்ளது. ஆனால் அவரின் கருத்துக்கள், தொலைநோக்குப் பார்வை என அனைத்தும் இந்தியாவின் முன்னேற்றதிற்காக பல நூற்றாண்டுகளுக்கான திட்டமாக இருந்தது. 

இந்திய நாடு முதலாளித்துவ ஜனநாயக நாடாக உருவாகுவதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து, சுதந்திர இந்தியா அறம் கொண்ட ஜனநாயக நாடாக இருக்க விரும்பினார். முதலாளித்துவ நாடு தேவைக்கு உற்பத்தி செய்யாமல் லாபத்திற்கு உற்பத்தி செய்யும் நாடாக அமையும். அதனால் உற்பத்தியை பெருக்கி நுகர்வை அதிகரிக்கும்போது இயற்கை வளங்கள் அனைத்தும் சூறையாடப்படும் என்று எண்ணினார்.

அதன் விழைவை இன்று நாம் நேரில் காண்கிறோம். தற்சார்பு வாழ்வை காந்திஜி எல்லோரிடமும் முன்வைத்தார். பொருள் சார்ந்த நுகர்வு வாழ்விலிருந்து விடுபட்டு எளிமையாய், நம் மக்கள் உற்பத்தியில் தயாராகும் பொருட்களை பயன்படுத்த அவர் அறிவுறுத்தினார். 

ஜூலை 30 ஆம் தேதி காந்திஜியும் அவரது குழுவினரும் பழைய டெல்லி ரயில் நிலையத்தில் இருந்து லாகூர் செல்லும் புகைவண்டியில் பயணத்தைக் தொடங்கினர். அவரின் அன்றாட பணிகளை ரயிலிலேயே தொடர்ந்து செய்தார். அவரின் பார்வையாளர்களை சந்திக்கும் பணி, நடைப்பயிற்சி போன்றவை இல்லாததால் கூடுதல் கடிதங்களுக்கு பதில் எழுதினார். 

கடுமையான குழப்பங்களுக்கும் கலவரங்களுக்கும் மத்தியிலும் பதட்டமின்றியும் தெளிவான சிந்தனையுடனும் இருப்பது அவரது பழக்கம். வழிவழியாக வந்த அசைக்க முடியாத கடவுள் நம்பிக்கையை காந்திஜி தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார். எப்போதும் நல்லதே நடக்கும்  என்ற அவரது அசைக்க முடியாத நம்பிக்கையை அவர் கடிதத்தில் வெளிப்படுத்தி இருந்தார். "நிலைமைகள் எல்லாம் தலைகீழாக உள்ளன. பிரிட்டிஸ்காரர்கள் உள்ளிட்ட நாம் அனைவரும் ஒரு சோதனை காலத்தில் இருக்கிறோம். கடவுள் மகத்தானவர். மனிதன் முடியாதது என்று கருதுவதை கடவுள் சாத்தியமாக்கிக் காட்டுவார். - அன்புடன் பாபு."



வழியில் ரயில் நிற்கும் நிலையங்களில் அவரைக் காண விரும்பிய கூட்டத்திற்கு ஜன்னல் வழியாகக் கைகளை அசைத்து அவர்களுக்கு காட்சி தந்தார். அன்று பகல் பொழுதிலேயே காந்திஜி ராவல்பிண்டியைச் சென்றடைந்தார். மாலையில் பிரார்த்தனை கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் "உண்மையான ஆழமான அன்பின் மூலம் தான் வெறுப்பையும் மனிதாபிமானமற்ற போக்குகளையும் வென்றெடுக்க முடியும்" என்று உறுதியுடன் கூறினார்.

No comments:

Post a Comment