பனிசூழ்ந்த வெண்மையை ஆடையாய் போர்த்திய மலைகள் சூழ்ந்த காஷ்மீருக்கு காந்திஜி பயணம் இம்முறை உறுதியானது. ஒரு பொதுப்பணியை செய்வதற்காகவே அவர் செல்கிறார். கடவுளுக்கான பணியை இது போன்ற பணிகளிலிருந்து அவரால் வேறுபடுத்திப் பார்க்க முடியாது. கடவுள் சேவையும், மக்கள் சேவையும் ஒன்றே என்று கருதுகிறவர் அவர்.
இதற்கு முன் பலமுறை அவர் காஷ்மீருக்கு செல்ல முடியாதபடி தடைகள் உண்டாயின. ஒருவேளை பயணத் திட்டங்களில் பொதுநல நோக்கம் தவிர பிற காரணங்கள் இருந்திருக்கலாம். அதனால்தான் கடவுள் தான் செல்ல முடியாதபடி தடுத்திருக்கிறார் என்று எண்ணினார் பாபுஜி. கடவுள் நம்பிக்கையும், அன்றாடப் பணிகளையும் அவர் உறுதியாய் பின்பற்றுபவர்.
தானும் தனது சீடர்களும் செய்யும் எந்தவொரு செயலும் அறம் சார்ந்ததாக இருக்குமெனில் எந்தத் தடையும் அவர்களின் செயலை தடுத்து நிறுத்த முடியாது என்று உறுதியாக நம்பினார் காந்தியடிகள். மாறாக அக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு தேவையான அனைத்து உதவிகளும் தானாகவே வந்து சேரும் என்று எண்ணினார்.
தன் நண்பருக்கு எழுதிய கடிதத்தில் அவர் "பொதுப் பணியில் ஈடுபடும் ஒரு மனிதனைத் தேடி பணம் வரும். பொதுநலப் பனி எதுவும் பணப் பற்றாக்குறையால் முன்னேறாமல் தடைபட்டது கிடையாது. இந்த உண்மையை விளக்கக்கூடிய பல அனுபவங்கள் எனக்கு உண்டு. சபர்மதி ஆசிரம உதாரணம் உங்களுக்கு நினைவில்லையா? அவசரத் தேவைக்கு பணம் இல்லாமல் நானும் மகன்லாலும் மிகவும் கவலையடைந்த நேரத்தில் திடீரென்று ஒரு கார் வந்து ஆசிரமத்தின் வாசலில் நின்றது. அதிலிருந்து வந்த முன்பின் தெரியாத நபர் ஒரு பெரிய பணக்கட்டை எனது கரங்களில் வைத்தார். கடவுளின் மீது நம்பிக்கை வைத்து தன்னல உணர்வின்றி நமது பணியை நாம் தொடர்ந்து செய்தால் நம் வேலைகள் என்றும் நின்று போகாது." என்று எழுதினார்.
ஆம் எவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும் பொது சேவையில் ஈடுபடும் பொழுது நமக்கு உதவிகள் வந்து சேருவதை நானே கண்கூட பார்த்திருக்கிறேன். சுயநலமற்ற செயலை நாம் எண்ணும்பொழுதோ செய்யும்பொழுதோ இயற்கையும் கடவுளும் நமக்கு தேவையானவற்றை ஏதோவொரு வகையில் கொண்டு வந்து சேர்த்துவிடும். இதை காந்திஜி உணர்ந்ததைப் போல் நானும் உணர்ந்திருக்கிறேன்.
கடவுள் மீது அசைக்க முடியாத பற்று கொண்டவர் காந்திஜி. பலரும் கூட்டாக சேர்ந்து ஒரு குழுவாக ஒன்றுபட்டு இயங்க வேண்டும் எனும் கோட்பாட்டில் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார் காந்திஜி. ஒரு குழுவாக இயங்கும்போது ஒருவரால் ஒத்துப் போக முடியவில்லை என்றால் அந்த குழுவிலிருந்து அவர் ஒதுங்கி விடுவது நல்லது என்று அவர் எண்ணினார்.
ஒருவர் தாம் நினைப்பது சரியானது என்று உறுதியாக நம்பினால் அந்த எண்ணத்தை அவரது மனசாட்சி ஏற்றுக் கொண்டால் அவர் குழுவிலிருந்து விலகி தனியாக செயல்பட வேண்டுமேயன்றி பெரும்பான்மையினரின் கருத்தை எதிர்ப்பதற்கும் தனது கருத்துக்களை மற்றவர் மீது திணிப்பதற்கும் முயலக் கூடாது என்று அவர் கருதினார்.
இந்த எண்ணத்தை தனது பேச்சிலும் செயலிலும் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தி வந்தார். தனது சடலத்தின் மீது தான் இந்தியாவை துண்டாடும் செயல் நடைபெறும் என்று கூறியவர் அவர். ஆனால் பெரும்பாலான செயல்மட்டத் தலைவர்கள் நாட்டைப் பிரித்துப் பாகிஸ்தானை அமைப்பது என்ற பிரிட்டிஷாரின் யோசனையை ஏற்றுக் கொண்டு விட்டனர். இந்திய சுதந்திரத்தை விரைவுபடுத்த இது அவசியம் என்று அவர்கள் கருதினர். இந்த நிலையில் அவர் தனது எதிர்ப்பைக் கைவிட்டு அவர்களின் முடிவுக்கு கட்டுப்பட்டார்.
ஆனால் அந்த முடிவால் அவர் மிகவும் வருத்தப்பட்டார். அதன் மோசமான விளைவுகளை பற்றி அவர் அச்சம் கொண்டார்.
இன்று நாம் நம் மிகப் பெரிய எதிரியாக பாகிஸ்தானை பார்க்கும் அளவுக்கு நம் மனதில் வெறுப்பை ஊற்றி அரசியல் செய்கிறார்கள். ஆனால் அந்த நாடு நம் சகோதர நாடு என்பதை நாம் மறந்துவிட்டோம். நாட்டின் முன்னேற்றத்தைப் பற்றி யோசிக்காமல் நாம் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம். இதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை, வளர்ச்சியும் இல்லை. வன்முறையை வன்முறையால் வெல்ல ஒரு போதும் முடியாது.
No comments:
Post a Comment