Sunday, January 13, 2019

தன்மீட்சி

                                                                புத்தக விமர்சனம்
தன்மீட்சி - ஜெயமோகன்
பதிப்பகம் : தன்னறம்
          இது என் முதல் புத்தக விமர்சனம். எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தனது வலைதளத்தில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த தன்மீட்சி. ஏதாவதொரு சூழலில் நாம் அனைவருமே நம்மை ஏதோவொன்றிலிருந்து மீட்டெடுக்க வேண்டிய நிலை உள்ளது. அவ்வாறாக ஏதோவொன்றில் சிக்கித் தவிக்கும்பொழுது நமக்கு எண்ணற்ற கேள்விகளும் மன உளைச்சல்களும் நம்மை பாடாய் படுத்தும். நாம் செல்லும் பாதை சரியா என்ற சந்தேகம் ஏற்படத் தொடங்கும்.

          அவ்வாறான சந்தேகங்களை நாம் முன்பெல்லாம் கோவிலில் உள்ள சுவாமிகளிடமும், பெரியோர்களிடமும், ஜோசியர்களிடமும், ஞானிகளிடமும் கேட்டுத் தெளிவு பெறுவோம். வாசிப்பவர்கள் தான் ஆசானாய் நினைப்பவர்களிடம் கேட்டுத் தெளிவு பெறுகின்றனர். அந்த வகையில் இப்புத்தகம் வாசிப்பவர்களின் கேள்விக்கான பதில்களை தாங்கி வெளிவந்திருக்கிறது. இந்த கேள்விகள் அனைவருக்கும் பொதுவானதாகவே இருக்கின்றது.

          நம் வாழ்வில் நாம் செய்கின்ற வேலையை நமக்கு மனதார பிடித்தும், அதை செய்யும் பொழுது மகிழ்ந்தும், செய்து முடித்த பிறகு நிறைவையும் பெருகிறோமா என்றால் பலரின் பதில் இல்லை என்றே சொல்லலாம். நான் படித்த படிப்பு வேறு, நான் செய்யும் வேலை வேறு, எனக்கு பிடித்த வேலை வேறு. கால சூழ்நிலைகளாலோ, பணத்திற்காகவோ எனக்கு பிடிக்காத இந்த வேலையை செய்கிறேன் என்று பலர் கூற கேட்டிருக்கிறேன். இதில் நிம்மதியோ மன நிறைவோ என்றும் இல்லை. எனக்கு அறம் சார்ந்த, மன நிறைவைத் தருகிற, எனக்குப் பிடித்த ஒரு வேலையை/தொழிலை நான் எவ்வாறு கண்டடைவது போன்ற கேள்விகளுக்கு ஜெயமோகன் அவர்க்கே உரித்தான பாணியில் கூறியுள்ளார்.
          
          இது போன்ற அக வாழ்வையும், புற வாழ்வையும் இணைக்கும் தொழிலை/வேலையை நம்மை கண்டடைய வைக்கும் பதில்கள் இதில் அடக்கம். ஒரு வாசகர் "என் 20 வயதில் இளமையின் வேகத்திலும், உற்சாகத்திலும், லட்சிய வெற்றியிலும் ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து உழைத்து, ஒரு பெரும் துரோகத்தால் 30 வயதில் அதை விட்டு வெளியேறி சொந்தமாக தொழில் தொடங்கி வாழ்க்கை வசதி அமைக்கப் பெற்றாலும் எனக்கென்று ஒரு கனவோ, ஆர்வமோ, வேட்க்கையோ இன்றி ஒவ்வொரு நாளையும் கழித்துக் கொண்டிருக்கிறேன். என் வாழ்வில் நிறைவோ, இலக்கோ இன்றி ஏனோ தானோ என்றே செல்கிறது. வாழ்க்கையை, நான் எங்கே தவறவிட்டேன் அல்லது வாழ்க்கை என்னை எங்கே கைவிட்டு விட்டது?" என்று கேட்டிருந்தார். இதற்கான பதிலை நாம் நமக்கான கேள்விக்கு பொருத்திக் கொள்ளலாம்.


          இது போன்ற கேள்விகளுக்கு கடந்த 20 ஆண்டுகளாக வாசகர்களுக்கு பதில் போட்டுக் கொண்டிருக்கிறார். இது சமகால பிரச்சனை. தொடர்ந்து எழுப்பப்பட்ட, திரும்ப திரும்ப பதில் கூற வேண்டிய கேள்வி பதில்களின் தொகுப்பு இப்புத்தகம். என் பல கேள்விகளுக்கு விடையை பெற்றேன். பல குற்ற உணர்ச்சிகளில் இருந்து விடு பெற உதவிய இப்புத்தகம் ஒரு பொக்கிஷம் என்றே கூறுவேன்.

          வாழ்வில் பல சமயங்களில் நம் கனவுகளை நோக்கி பயணிக்க நமக்கு உந்துதல் தேவைப்படுகிறது. இது கேள்வி பதில் கொண்ட புத்தகமானாலும் நமக்கு மிகப் பெரிய உந்துதலை அடைய இப்புத்தகம் பெரும் உதவி புரியும். ஜெயமோகன் அவர்களின் ஒவ்வொரு வார்த்தைகளும் அவ்வளவு உள்ளர்த்தத்தை கொண்டது. நம்மை பெரிதும் சிந்திக்கத் தூண்டுவது. இப்புத்தகம் சிந்தனைக்கும், செயல் ஆக்கத்திற்கும் தீனி போடக்கூடியது.

          அதிகம் வாசிப்பதாலோ என்னவோ என் சிந்தனை என் பேச்சு அனைத்தும் சமூக மாற்றத்திற்காகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பது குறித்தும், அறம் சார்ந்ததாகவும் இருப்பதால் இது என்னை ஒரு படி என் உறவினர்களில் இருந்து விலக்கியே வைத்திருக்கிறது. சில சமயம் நானும் ஏன் மற்றவர்களை போல் சாதாரண வாழ்க்கையை வாழக்கூடாது என்ற கேள்வி என்னைத் துரத்தும்.

          என்னால் என் பெற்றோர்கள் அடையும் மன உளைச்சல் மிக மிக அதிகம். பெற்றோர்களின் மன உளைச்சலால் நான் அதிக குற்ற உணர்ச்சியடைந்தேன். நான் வித்யாசமானவள் என்று தெரிந்தாலும், இந்த குற்ற உணர்ச்சி என்னை வதைக்கும். ஆனால் அந்த குற்ற உணர்ச்சியில் இருந்து என்னை மீட்டெடுத்ததே இந்த தன்மீட்சி.

Tuesday, January 1, 2019

விடைபெறும் 2018

          ஆஹா!! இந்த வருடம் தான் எத்தனை எத்தனை மாற்றம் கொண்டதாக இருந்து விட்டது.

          இந்த 2018 ஆம் ஆண்டு நிறைய கற்றல் நிறைந்ததாகவும், புது அனுபவங்களை கொண்டதாகவும், பல நல்ல மனிதர்களை பெற்றும், நிறைய உறவுகளை இழந்தும், நினைத்துப் பார்க்க முடியா வலிகளை அனுபவித்தும், உளமார மகிழ்ந்தும், சில கனவுகளை நனவாக்கியும், பல கனவுகளை நோக்கி பயணிக்கும் ஆற்றலையும் என்னிடம் கொடுத்துவிட்டு சென்றுள்ளது.

          ஆம் 2017 டிசம்பர் 31 இரவு ஊட்டியிலிருந்து பெங்களூருக்கு பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கையில் பிறந்தது 2018 வருடம். சரியாக 12.00 மணியளவில் நூறுக்கும் மேலான முகமறியா சகோதரர்கள் பேருந்தை வழி மறித்து, ஜன்னலை தட்டி எழுப்பி புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறிச்சென்றனர். இப்படி முகமறியா உள்ளங்களின் வாழ்த்துக்களால் இந்த ஆண்டு எண்ணற்ற முகமறியா மனிதர்களை எனக்குக் கொடுத்தது.

          ஆரம்பத்தில் வழக்கம் போல் மலை ஏறுதல், ஓட்டம் என்று சென்றது. பிறகு ஆழம் விழுதுகள் நிகழ்ச்சியின் மூலமாக சில நல்ல நண்பர்களும், உறவுகளும் கிடைத்தது. பிறகு குக்கூ காட்டுப்பள்ளி. வாழ்வின் அர்த்தத்தை கொடுத்து அகம் மகிழ வாழ கற்றுக் கொடுத்த இடம். பணத்தை மட்டுமே யோசிக்கும், சுவாசிக்கும் சூழலிருந்து வந்த எனக்கு குக்கூ மக்களின் அன்பும், கூட்டு வாழ்க்கையும் நெகிழச்செய்தது. நிறைய புதிய சுயநலமில்லா  உறவுகள் கிடைக்கப்பெற்றேன். மனதார வாழ்ந்திருந்த நாட்களை கொடுத்தது குக்கூவும் அங்கிருந்த மக்களும்.

          இவ்வாறு மகிழ்ந்திருந்த சமயத்தில் தான் என் அப்பிச்சியின் உடல்நிலை மிக மோசமாகி என்னை வருத்தியெடுத்தது. அவர் சரியாவதற்குள் என் மனநிலை மோசமானது என் சொந்தங்களைப் பார்த்து. இந்த சுயநல உலகிற்க்கு குணமாகித் திரும்பி வருவதை விட நிம்மதியாய் சொர்க்கலோகம் செல்லலாம் என்று என் அப்பிச்சி நினைத்து விட்டார் போல. ஜூன் 2, என்னை இந்த கூட்டத்தின் நடுவிலேத் தனியாக விட்டுச்சென்றார். அவர் இறப்பிற்கு வந்தவர்களில் 99.9 சதவீதம் சொந்தங்கள் அவர் இறப்பிற்கு வருத்தப்பட்டு வந்தவர்கள் அல்ல. கடமைக்காக வந்தவர்கள்.

          இது மிகுந்த மன உளைச்சலை கொடுத்தது. இதிலிருந்து வெளிவருவதற்க்காக பள்ளியில் கவனத்தை செலுத்தினேன். அலுவலுகத்திலும் நிறைய ஏமாற்றங்கள். சில உறவுகளும், நட்புகளும் என்னை உலுக்கியெடுத்தது. என்னை மீண்டும் மீண்டும் கீழே இழுத்துத் தள்ளியது.
எல்லாவற்றையும் தூக்கி எரியத் தயாரானேன். உறவுகளை பிரிவது, எனக்கு உயிர் பிரிவது போன்றது. அனால் சில சமயங்களில் சில உறவுகளை பிரிந்தால் மட்டுமே நம் உயிர் மிஞ்சும் என்ற நிலையில் சிலரை பிரிந்து என்னை காப்பாற்றிக்கொண்டேன்.

          பள்ளியின் நர்சரி வேலைகள், பிளாஸ்டிக் காலம் புத்தகம் தமிழ் மொழிபெயர்ப்பு என்று மனநிலை சரியாகத் தொடங்கியது. புத்தகத்தில் என் பெயரை எதிர் பார்க்கவில்லை. அதுவும் ஒரு பெரிய கனவே. அதுவும் கிருஷ்ணம்மாள் அம்மாவின் ஆசியுடன் புத்தகம் கையில் கிடைத்தது. பயணங்கள் எதுவும் செல்லாமல் சில மாதம் வீட்டிலேயே தங்க நேர்ந்தது. அது நரகம் போன்றதாக மாறியது. உடல்நிலையும், மனநிலையும் மோசமானது. மனநிலையை சீராக வைத்துக்கொள்ள இந்த வான்சிட்டு வலைப்பதிவைத் தொடங்கினேன்.

          என் நண்பர்களின் வாழ்வில் நல்ல தருணங்கள் நடந்தேறி மகிழ்வைக் கொடுத்தது. நிறைய நிறைய குழந்தைகளை சந்தித்தேன். புதுமையான அனுபவங்கள். வலிகளைத் தாங்க கற்றுக்கொடுத்தது இந்த 2018 ஆம் ஆண்டு. ஆண்டின் இறுதியில் எழுத்தாளர் ஜெயமோகன் அய்யா அவர்களை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றேன். மாபெரும் கனவு இது. அதிகமான புத்தகங்கள் வாசித்த வருடம் இது. இந்த வருடத்தை அர்த்தமுள்ளதாக்கிய அனைவருக்கும் என் நன்றியும் வாழ்த்துக்களும்.

          இவை அனைத்திற்கும் மேலாக என்னுடன் ஒரு நட்பு எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கிறது. என் எல்லா வலிகளிலும், துயரங்களிலும், என் மோசமான மனநிலையிலும் என்னுடன் இருந்து எனக்கு தோள் கொடுத்துத் தாங்குகிறது. அனைவரும் என்னை கைவிட்ட நிலையிலும் அது என் பக்கம் நிற்கிறது. இந்த உலகில் நீங்கள் எவ்வளவு மோசமான நிலைக்குச் சென்றாலும் நல்ல நட்பு இருந்தால் எதையும் தாண்டி வரலாம். அப்படி ஒரு நட்பு கிடைத்தது எனக்கு வரமே. இந்த ஆண்டின் அனைத்து மகிழ்வையும் என் தோழன் ஸ்ரீனிக்கு சமர்ப்பிக்கிறேன்.

          2019 ஆண்டை மகிழ்ச்சியாலும், அனுபவத்தாலும் நிறைக்க வரவேற்கிறேன்.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.