Sunday, January 13, 2019

தன்மீட்சி

                                                                புத்தக விமர்சனம்
தன்மீட்சி - ஜெயமோகன்
பதிப்பகம் : தன்னறம்
          இது என் முதல் புத்தக விமர்சனம். எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தனது வலைதளத்தில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த தன்மீட்சி. ஏதாவதொரு சூழலில் நாம் அனைவருமே நம்மை ஏதோவொன்றிலிருந்து மீட்டெடுக்க வேண்டிய நிலை உள்ளது. அவ்வாறாக ஏதோவொன்றில் சிக்கித் தவிக்கும்பொழுது நமக்கு எண்ணற்ற கேள்விகளும் மன உளைச்சல்களும் நம்மை பாடாய் படுத்தும். நாம் செல்லும் பாதை சரியா என்ற சந்தேகம் ஏற்படத் தொடங்கும்.

          அவ்வாறான சந்தேகங்களை நாம் முன்பெல்லாம் கோவிலில் உள்ள சுவாமிகளிடமும், பெரியோர்களிடமும், ஜோசியர்களிடமும், ஞானிகளிடமும் கேட்டுத் தெளிவு பெறுவோம். வாசிப்பவர்கள் தான் ஆசானாய் நினைப்பவர்களிடம் கேட்டுத் தெளிவு பெறுகின்றனர். அந்த வகையில் இப்புத்தகம் வாசிப்பவர்களின் கேள்விக்கான பதில்களை தாங்கி வெளிவந்திருக்கிறது. இந்த கேள்விகள் அனைவருக்கும் பொதுவானதாகவே இருக்கின்றது.

          நம் வாழ்வில் நாம் செய்கின்ற வேலையை நமக்கு மனதார பிடித்தும், அதை செய்யும் பொழுது மகிழ்ந்தும், செய்து முடித்த பிறகு நிறைவையும் பெருகிறோமா என்றால் பலரின் பதில் இல்லை என்றே சொல்லலாம். நான் படித்த படிப்பு வேறு, நான் செய்யும் வேலை வேறு, எனக்கு பிடித்த வேலை வேறு. கால சூழ்நிலைகளாலோ, பணத்திற்காகவோ எனக்கு பிடிக்காத இந்த வேலையை செய்கிறேன் என்று பலர் கூற கேட்டிருக்கிறேன். இதில் நிம்மதியோ மன நிறைவோ என்றும் இல்லை. எனக்கு அறம் சார்ந்த, மன நிறைவைத் தருகிற, எனக்குப் பிடித்த ஒரு வேலையை/தொழிலை நான் எவ்வாறு கண்டடைவது போன்ற கேள்விகளுக்கு ஜெயமோகன் அவர்க்கே உரித்தான பாணியில் கூறியுள்ளார்.
          
          இது போன்ற அக வாழ்வையும், புற வாழ்வையும் இணைக்கும் தொழிலை/வேலையை நம்மை கண்டடைய வைக்கும் பதில்கள் இதில் அடக்கம். ஒரு வாசகர் "என் 20 வயதில் இளமையின் வேகத்திலும், உற்சாகத்திலும், லட்சிய வெற்றியிலும் ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து உழைத்து, ஒரு பெரும் துரோகத்தால் 30 வயதில் அதை விட்டு வெளியேறி சொந்தமாக தொழில் தொடங்கி வாழ்க்கை வசதி அமைக்கப் பெற்றாலும் எனக்கென்று ஒரு கனவோ, ஆர்வமோ, வேட்க்கையோ இன்றி ஒவ்வொரு நாளையும் கழித்துக் கொண்டிருக்கிறேன். என் வாழ்வில் நிறைவோ, இலக்கோ இன்றி ஏனோ தானோ என்றே செல்கிறது. வாழ்க்கையை, நான் எங்கே தவறவிட்டேன் அல்லது வாழ்க்கை என்னை எங்கே கைவிட்டு விட்டது?" என்று கேட்டிருந்தார். இதற்கான பதிலை நாம் நமக்கான கேள்விக்கு பொருத்திக் கொள்ளலாம்.


          இது போன்ற கேள்விகளுக்கு கடந்த 20 ஆண்டுகளாக வாசகர்களுக்கு பதில் போட்டுக் கொண்டிருக்கிறார். இது சமகால பிரச்சனை. தொடர்ந்து எழுப்பப்பட்ட, திரும்ப திரும்ப பதில் கூற வேண்டிய கேள்வி பதில்களின் தொகுப்பு இப்புத்தகம். என் பல கேள்விகளுக்கு விடையை பெற்றேன். பல குற்ற உணர்ச்சிகளில் இருந்து விடு பெற உதவிய இப்புத்தகம் ஒரு பொக்கிஷம் என்றே கூறுவேன்.

          வாழ்வில் பல சமயங்களில் நம் கனவுகளை நோக்கி பயணிக்க நமக்கு உந்துதல் தேவைப்படுகிறது. இது கேள்வி பதில் கொண்ட புத்தகமானாலும் நமக்கு மிகப் பெரிய உந்துதலை அடைய இப்புத்தகம் பெரும் உதவி புரியும். ஜெயமோகன் அவர்களின் ஒவ்வொரு வார்த்தைகளும் அவ்வளவு உள்ளர்த்தத்தை கொண்டது. நம்மை பெரிதும் சிந்திக்கத் தூண்டுவது. இப்புத்தகம் சிந்தனைக்கும், செயல் ஆக்கத்திற்கும் தீனி போடக்கூடியது.

          அதிகம் வாசிப்பதாலோ என்னவோ என் சிந்தனை என் பேச்சு அனைத்தும் சமூக மாற்றத்திற்காகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பது குறித்தும், அறம் சார்ந்ததாகவும் இருப்பதால் இது என்னை ஒரு படி என் உறவினர்களில் இருந்து விலக்கியே வைத்திருக்கிறது. சில சமயம் நானும் ஏன் மற்றவர்களை போல் சாதாரண வாழ்க்கையை வாழக்கூடாது என்ற கேள்வி என்னைத் துரத்தும்.

          என்னால் என் பெற்றோர்கள் அடையும் மன உளைச்சல் மிக மிக அதிகம். பெற்றோர்களின் மன உளைச்சலால் நான் அதிக குற்ற உணர்ச்சியடைந்தேன். நான் வித்யாசமானவள் என்று தெரிந்தாலும், இந்த குற்ற உணர்ச்சி என்னை வதைக்கும். ஆனால் அந்த குற்ற உணர்ச்சியில் இருந்து என்னை மீட்டெடுத்ததே இந்த தன்மீட்சி.

3 comments:

  1. Really good. Keep on go your way sister. I will try to read this.

    ReplyDelete
  2. செயல்புரிக தோழியே.

    ReplyDelete