Tuesday, January 1, 2019

விடைபெறும் 2018

          ஆஹா!! இந்த வருடம் தான் எத்தனை எத்தனை மாற்றம் கொண்டதாக இருந்து விட்டது.

          இந்த 2018 ஆம் ஆண்டு நிறைய கற்றல் நிறைந்ததாகவும், புது அனுபவங்களை கொண்டதாகவும், பல நல்ல மனிதர்களை பெற்றும், நிறைய உறவுகளை இழந்தும், நினைத்துப் பார்க்க முடியா வலிகளை அனுபவித்தும், உளமார மகிழ்ந்தும், சில கனவுகளை நனவாக்கியும், பல கனவுகளை நோக்கி பயணிக்கும் ஆற்றலையும் என்னிடம் கொடுத்துவிட்டு சென்றுள்ளது.

          ஆம் 2017 டிசம்பர் 31 இரவு ஊட்டியிலிருந்து பெங்களூருக்கு பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கையில் பிறந்தது 2018 வருடம். சரியாக 12.00 மணியளவில் நூறுக்கும் மேலான முகமறியா சகோதரர்கள் பேருந்தை வழி மறித்து, ஜன்னலை தட்டி எழுப்பி புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறிச்சென்றனர். இப்படி முகமறியா உள்ளங்களின் வாழ்த்துக்களால் இந்த ஆண்டு எண்ணற்ற முகமறியா மனிதர்களை எனக்குக் கொடுத்தது.

          ஆரம்பத்தில் வழக்கம் போல் மலை ஏறுதல், ஓட்டம் என்று சென்றது. பிறகு ஆழம் விழுதுகள் நிகழ்ச்சியின் மூலமாக சில நல்ல நண்பர்களும், உறவுகளும் கிடைத்தது. பிறகு குக்கூ காட்டுப்பள்ளி. வாழ்வின் அர்த்தத்தை கொடுத்து அகம் மகிழ வாழ கற்றுக் கொடுத்த இடம். பணத்தை மட்டுமே யோசிக்கும், சுவாசிக்கும் சூழலிருந்து வந்த எனக்கு குக்கூ மக்களின் அன்பும், கூட்டு வாழ்க்கையும் நெகிழச்செய்தது. நிறைய புதிய சுயநலமில்லா  உறவுகள் கிடைக்கப்பெற்றேன். மனதார வாழ்ந்திருந்த நாட்களை கொடுத்தது குக்கூவும் அங்கிருந்த மக்களும்.

          இவ்வாறு மகிழ்ந்திருந்த சமயத்தில் தான் என் அப்பிச்சியின் உடல்நிலை மிக மோசமாகி என்னை வருத்தியெடுத்தது. அவர் சரியாவதற்குள் என் மனநிலை மோசமானது என் சொந்தங்களைப் பார்த்து. இந்த சுயநல உலகிற்க்கு குணமாகித் திரும்பி வருவதை விட நிம்மதியாய் சொர்க்கலோகம் செல்லலாம் என்று என் அப்பிச்சி நினைத்து விட்டார் போல. ஜூன் 2, என்னை இந்த கூட்டத்தின் நடுவிலேத் தனியாக விட்டுச்சென்றார். அவர் இறப்பிற்கு வந்தவர்களில் 99.9 சதவீதம் சொந்தங்கள் அவர் இறப்பிற்கு வருத்தப்பட்டு வந்தவர்கள் அல்ல. கடமைக்காக வந்தவர்கள்.

          இது மிகுந்த மன உளைச்சலை கொடுத்தது. இதிலிருந்து வெளிவருவதற்க்காக பள்ளியில் கவனத்தை செலுத்தினேன். அலுவலுகத்திலும் நிறைய ஏமாற்றங்கள். சில உறவுகளும், நட்புகளும் என்னை உலுக்கியெடுத்தது. என்னை மீண்டும் மீண்டும் கீழே இழுத்துத் தள்ளியது.
எல்லாவற்றையும் தூக்கி எரியத் தயாரானேன். உறவுகளை பிரிவது, எனக்கு உயிர் பிரிவது போன்றது. அனால் சில சமயங்களில் சில உறவுகளை பிரிந்தால் மட்டுமே நம் உயிர் மிஞ்சும் என்ற நிலையில் சிலரை பிரிந்து என்னை காப்பாற்றிக்கொண்டேன்.

          பள்ளியின் நர்சரி வேலைகள், பிளாஸ்டிக் காலம் புத்தகம் தமிழ் மொழிபெயர்ப்பு என்று மனநிலை சரியாகத் தொடங்கியது. புத்தகத்தில் என் பெயரை எதிர் பார்க்கவில்லை. அதுவும் ஒரு பெரிய கனவே. அதுவும் கிருஷ்ணம்மாள் அம்மாவின் ஆசியுடன் புத்தகம் கையில் கிடைத்தது. பயணங்கள் எதுவும் செல்லாமல் சில மாதம் வீட்டிலேயே தங்க நேர்ந்தது. அது நரகம் போன்றதாக மாறியது. உடல்நிலையும், மனநிலையும் மோசமானது. மனநிலையை சீராக வைத்துக்கொள்ள இந்த வான்சிட்டு வலைப்பதிவைத் தொடங்கினேன்.

          என் நண்பர்களின் வாழ்வில் நல்ல தருணங்கள் நடந்தேறி மகிழ்வைக் கொடுத்தது. நிறைய நிறைய குழந்தைகளை சந்தித்தேன். புதுமையான அனுபவங்கள். வலிகளைத் தாங்க கற்றுக்கொடுத்தது இந்த 2018 ஆம் ஆண்டு. ஆண்டின் இறுதியில் எழுத்தாளர் ஜெயமோகன் அய்யா அவர்களை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றேன். மாபெரும் கனவு இது. அதிகமான புத்தகங்கள் வாசித்த வருடம் இது. இந்த வருடத்தை அர்த்தமுள்ளதாக்கிய அனைவருக்கும் என் நன்றியும் வாழ்த்துக்களும்.

          இவை அனைத்திற்கும் மேலாக என்னுடன் ஒரு நட்பு எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கிறது. என் எல்லா வலிகளிலும், துயரங்களிலும், என் மோசமான மனநிலையிலும் என்னுடன் இருந்து எனக்கு தோள் கொடுத்துத் தாங்குகிறது. அனைவரும் என்னை கைவிட்ட நிலையிலும் அது என் பக்கம் நிற்கிறது. இந்த உலகில் நீங்கள் எவ்வளவு மோசமான நிலைக்குச் சென்றாலும் நல்ல நட்பு இருந்தால் எதையும் தாண்டி வரலாம். அப்படி ஒரு நட்பு கிடைத்தது எனக்கு வரமே. இந்த ஆண்டின் அனைத்து மகிழ்வையும் என் தோழன் ஸ்ரீனிக்கு சமர்ப்பிக்கிறேன்.

          2019 ஆண்டை மகிழ்ச்சியாலும், அனுபவத்தாலும் நிறைக்க வரவேற்கிறேன்.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment