Sunday, August 2, 2020

காந்தியின் இறுதி நாட்களுடனான என் பயணம் - ஜூலை 29,1947. நாள் - 186

ஏற்கனவே பலமுறை அழைப்புகள் வந்தும் ஏதாவது ஒரு காரணத்தால் அதை ஏற்று செல்ல முடியாத நிலையில் காந்திஜி காஷ்மீருக்கு இம்முறை கட்டாயமாக செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் 1915இல் தென்னாபிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியிருந்த நேரம் அரித்துவாருக்கு புனித பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு ஸ்ரீநகரிலிருந்து வந்திருந்த காஷ்மீர் மகாராஜாவை சந்தித்தார் பாபுஜி.

அவர் பாபுஜி தனது ராஜ்யத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். ஆனால் காந்திஜியால் அந்த அழைப்பை ஏற்க முடியவில்லை. அதன் பிறகு 1935 ஆம் ஆண்டில் அவரை மீண்டுமொரு முறை அழைத்தது காஷ்மீர். அவர் அப்படாபாத்தில் காந்திஜி கான் அப்துல் கஃபார்கான் மற்றும் அவரது சகோதரர் டாக்டர் கான் சாகிப் ஆகியவர்களுடன் தங்கி இருந்தார். அந்த முறையும் அவர் பயணம் ரத்தானது.

இன்று துப்புரவாளர் குடியிருப்பில் பிரார்த்தனை கூட்டத்தில் இதனை நினைவுபடுத்தி இப்பொழுது ஒரு மாதம் முன்னரே காஷ்மீருக்கு ஒரு குறுகிய பயணம் மேற்கொள்ள காந்திஜி தயாராய் இருந்தார். மவுண்ட்பேட்டன் பிரபுவின் ஒப்புதலுடன் செல்ல விரும்பினார். ஆனால் வைஸ்ராய் காந்திஜியின் பயணத்தை ஒத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அதன் பின் இப்பொழுது காந்திஜி செல்வதா, நேரு செல்வதா என்று முடிவு செய்யப்படாமல் இருந்தது. ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு சில நாட்களே உள்ள நிலையில் சுதந்திர இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்க இருப்பவரை அனுப்ப இயலாது என்று வைஸ்ராய் நினைத்தார். காஷ்மீர் மக்களை கைவிட்டு விடவில்லை என்று மக்கள் பணி செய்பவர்களுக்கு உறுதி அளிக்கவே நேரு அங்கு செல்ல விரும்பினார்.



அன்றைய தலைவர்கள் இந்த நாட்டிற்காக செய்யும் ஒவ்வொரு செயலையும் மிகுந்த பொறுப்புணர்வுடன் செய்துள்ளனர். இல்லையென்றால் தரிசாய் விட்டுச்சென்ற நிலம் இன்று விளையும் பூமியாய் மாறியிருக்காது. புகார்கள் இல்லாமல் ஒற்றுமையுடன் அவர்கள் இந்த நாட்டை கட்டமைத்து உள்ளனர். எந்தவொரு மக்களையும் கைவிடாமல் சுதந்திர ஜனநாயக நாடாக உருவாக்கி பசி, பஞ்சம், இன மத மொழி பாகுபாடின்றி உருவாக அனைவரும் பாடுபட்டனர். ஓய்வு ஒழிச்சல் இன்றி ஓடிக் கொண்டே இருந்தனர் எனலாம்.

காஷ்மீருக்கு மூன்று நாள் பயணம் மேற்கொள்ள காந்திஜி திட்டமிட்டிருந்தார். பயணத்தை முடித்து ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் நவகாளிக்கு சென்றுவிட அவர் விரும்பினார். தான் செல்வதும் செய்வதும், தனிப்பட்ட முறையிலும் அரசியல் ரீதியிலும் சரியானதாக இருக்க வேண்டும் என்பதில் காந்திஜி கறாராக இருந்தார்.

ராவல்பிண்டிக்கு அவர் மேற்கொள்ளவிருந்த ரெயில் பயணத்தின் போதும், அங்கிருந்து காஷ்மீருக்கு பயணம் செல்லும்போதும் மக்கள் அவருக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆரவாரமற்ற அமைதியான பயணம் செய்ய தான் விரும்புவதாக அறிவித்தார்.

இது சோற்றுக்கும் துணிக்கும் கூட பஞ்சம் ஏற்பட்டுள்ள மோசமான காலம். மிகப்பெரும் சுமையை நாட்டின் சிறந்த தலைவர்கள் எதிர்கொண்டு வருகின்ற காலம் . கடவுளின் அருள் இல்லை என்றால் உறுதியான நெஞ்சம் கொண்ட அந்த சிறந்த தலைவர்கள் கூட உடைந்து நொறுங்கி போவார்கள் என்றார்.

அன்றைய தலைவர்கள் மீது நாம் சுலபமாக சேற்றைவாரி இன்று இறைத்துவிடுகிறோம். ஆனால் ஒவ்வொருவரின் பணியும் மகாத்தானதாக இருந்திருக்கிறது. ஒவ்வொருவரும் சுயநலமின்றி பாடுபட்டுள்ளார்கள். இன்றைய அரசியல் காரணங்களுக்காக அம் மாபெறும் தலைவர்களை தூற்றுவதை போல் தேச துரோகம் எதுவும் இல்லை என்றே தோன்றுகிறது.

No comments:

Post a Comment