Friday, August 14, 2020

காந்தியின் இறுதி நாட்களுடனான என் பயணம் - ஆகஸ்டு 10,1947. நாள் - 174

கல்கத்தா என்றாலே பல உன்னதமான இனிமையான நினைவுகளை கொடுக்கும் இடமாக இருந்தது. ராமகிருஷ்ணரின் பேலூர் மடம், குருதேவ் ரவீந்திரநாத் தாகூரின் கனவுக் கல்விக் கூடமான விஸ்வபாரதி பல்கலைக்கழகம், ஹூக்ளி ஆறு, கபீர் உலவிய நிலம், வங்காள மாகாணம் என்று புகழ்ப் பெற்றிருந்த பாரம்பரியம் கொண்டது என்று பல உயர்ந்த நினைவுகளைத் தான் தன் நினைவில் கொண்டிருந்தார் காந்திஜி.

ஆனால் இன்று  மோசமான பயங்கர தீய சக்திகள் திடீரென்று நாட்டைத் துண்டாடப் புறப்பட்டுவிட்டன. சிறிதும் மனிதமற்று மதவெறி கொண்டு மனிதர்கள் வெறி பிடித்தவர்களாய் செயல்படும் போது இதுவரை கண்டு வந்த உயர்வான கனவுகள் எல்லாம் சுக்குநூறாய் போய்விடுமோ என்ற அச்சம் அவருக்கு ஏற்பட்டது. 

1904 ஆம் ஆண்டு வைஸ்ராய் கர்சன் வங்காளத்தை இந்தியாவிலிருந்து பிரிப்பதற்காக முயற்சித்த பொது அங்கே மிகப் பெரிய தேச பக்தி வெடித்துக் கிளம்பியது. 1905 ஆம் ஆண்டு வங்காளம் இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்டது. ஆனாலும் மிகப்பெரிய போராட்டத்தாலும் ஒற்றுமையாலும் 1911ஆம் ஆண்டு மீண்டும் வங்காளம் இந்தியாவில் இணைக்கப்பட்டது. இந்திய சுதந்திரம் அடைய இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் இது மாதிரியான பிரிவினைப் போராட்டங்கள், வன்முறைகள் நிகழ்வதை பாபுஜியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 

இன்றைய நாள் பலதரப் பட்ட மக்கள் காந்திஜியை சந்தித்த வண்ணம் இருந்தனர். அவர்களின் முகத்தில் மகிழ்ச்சி என்பதே இல்லை. இங்கு சுற்றியிருக்கும் பகுதிகளில் வசிக்கும் முஸ்லீம்கள் மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகி இருந்தது காந்திஜிக்கு மிகப் பெரிய வேதனையை அளித்தது.

இதை எப்படி எதிர்கொள்வது என்று காந்திஜி திண்டாடிப் போயிருந்தார். கல்கத்தாவின் முன்னாள் மேயராக இருந்த எஸ்.முகம்மது உஸ்மான் அப்போது கல்கத்தா முஸ்லீம் லீக் கட்சியின் செயலாளராக இருந்தார். அவரைப் பயன்படுத்தி முஸ்லீம்களின் பயத்தைப் போக்க முடியும் என்று எண்ணினார் காந்திஜி. அந்த முஸ்லீம் தலைவர் காந்திஜியை அவர் குழுவுடன் வந்து சந்தித்தார். அவர்களின் கோரிக்கையைக் கேட்ட காந்திஜி அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எண்ணினார். 

அந்த தலைவர் நம் அமைதித் தூதுவரிடம் நவகாளி பயணத்தை ஒத்தி வைக்க வேண்டினார். இன்னும் இரண்டு நாட்களாவது எங்களுடன் தயவு செய்து தங்குங்கள் என்று அவர்கள் கெஞ்சிக் கேட்டுக் கொண்டனர். நவகாளியில் உள்ள இந்துக்களுக்கு உதவுவதற்கு நீங்கள் செல்கிறீர்கள். அங்கே இருக்கும் இந்துக்களை போல இங்குள்ள முஸ்லீம்களை காப்பாற்றுவதும் உங்கள் கடமை என்று கோரிக்கை வைத்தனர்.

கடவுள் சித்தம் இவ்வாறு இருக்கிறது என்று காந்திஜி சிந்தித்தார். ஆகஸ்ட் 15ஆம் தேதி கிழக்கு வங்கத்தில் இருக்க வேண்டுமென்று அவர் மிகவும் விரும்பினார். ஆனால் "உங்களுடன் கல்கத்தாவில் இருக்க நான் உடன்படுகிறேன்" என்று உஸ்மானிடமும் அவரது குழுவிடமும் தெரிவித்தார். நீங்கள் எனக்கு ஒரு உத்தரவாதத்தை தர வேண்டும். "நவகாளியில் அமைதி நிலவும் என்பதே அந்த உத்தரவாதம். உங்கள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு நான் நவகாளிக்கு செல்லாமலிருக்கும் நிலையில் அங்கு நவகாளியில் எந்த அசம்பாவிதம் நடந்தாலும் என் உயிருக்கு உத்தரவாதம் இல்லை." என்று காந்திஜி தெரிவித்தார்.

நாடு சுயாட்சிப் பொறுப்பை ஏற்கும்போது வன்முறை வெறியாட்டங்கள் நிகழ்வது மிகப் பெரிய அவமானமாக இருக்கும் என்று பிரார்த்தனை கூட்டத்தில் கூறினார். ஆகஸ்ட் 15 ஆம் தேதி நவகாளியில் இருப்பதாக எடுத்துக் கொண்ட உறுதிமொழியையும் காப்பாற்ற வேண்டும். அதே நேரத்தில் இவர்களின் கோரிக்கையும் நிறைவேற்ற வேண்டும். அவர் ஒரு தீர்க்கமான முடிவெடுத்தார்.

11 ஆம் தேதி நவகாளிக்கு புறப்பட இருந்த முடிவை மாற்றி 13ஆம் தேதி நவகாளிக்கு புறப்பட தன் பயணத்தை மாற்றிக் கொண்டார் காந்திஜி. மாலை பிரார்த்தனைக்கு பெரும் திரளாக மக்கள் வந்திருந்தனர். அவர்களிடம் "எனது வாழ்நாள் முழுவதும் இந்து முஸ்லீம்  ஒற்றுமைக்காக போராடி வந்திருக்கிறேன். நாடு விடுதலை அடையும்போது இரு பிரிவினர்களும் இப்படி மதம் பிடித்தவர்கள் போல நடந்துகொள்வது வேதனை அளிக்கிறது. இந்த பைத்தியக்காரத் தனத்தை என்னால் சகித்துக் கொண்டு உயிர் வாழ முடியாது. இது தொடர்ந்தால் எதிர்காலம் இருளானதாகத் தான் இருக்கும்" என்றார்.

No comments:

Post a Comment