Sunday, August 9, 2020

காந்தியின் இறுதி நாட்களுடனான என் பயணம் - ஆகஸ்டு 04,1947. நாள் - 180

காஷ்மீரில் இருந்து திரும்புகையில் ஜம்முவில் தாங்கினார் காந்திஜி. அவர் தங்கியிருந்த இடத்திலும் அதை சுற்றியும் அவர் பல்வேறு மக்களை, குழுக்களை சென்று சந்தித்து உரையாடி வந்தார். அவரின் நாட்கள் முழுவதும் பயணத்திலேயே அதிகமாக கழிந்தது. ஆனாலும் அவர் எழுதுவதற்கு தனது நேரத்தை தவறாமல் ஒதுக்க முயற்சித்தார்.

ஆனாலும் பதில் எழுத முடியாமல் கடிதங்களும், ஹரிஜன் பத்திரிக்கையும் பாக்கியிருந்தது. நேற்றைய நாள்  தனது ஏராளமான பணிகளுக்கு இடையே ஹைதராபாத்வாசி ஒருவரின் கடிதத்திற்கு பதில் எழுதுவதற்கு தனது நேரத்தை அப்படியே ஒதுக்கி விட்டார். அவர் தனது கடிதத்தில் பின்வருமாறு எழுதியிருந்தார்.

"காந்திஜி உயிருடன் புதைக்கப்படுகிறார். காந்திஜி என்பதன் பொருள் அவரது லட்சியங்கள் ஆகும். நாம் இன்றிருக்கும் இடத்திற்கு அந்த லட்சியங்கள் தான் நம்மை அழைத்து வந்துள்ளன. இவ்வளவு உயரத்திற்கு நாம் ஏறுவதற்குக் காரணமான ஏணியை நாம் உதைத்துத் தள்ளுகிறோம். காந்திஜியின் மிகப் பெரிய சீடர்கள் என்று கருதப்படுபவர்கள் இதனைச் செய்து வருகின்றனர். இந்துமுஸ்லீம் ஒற்றுமை, இந்துஸ்தானியை தேசிய மொழியாக ஆக்குவது, காதி கிராமத்து தொழில்கள் ஆகிய அனைத்துமே மறக்கப்பட்டு விட்டன. இவற்றை பற்றியெல்லாம் இன்னமும் பேசி வருபவர்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் அல்லது அவர்களே மற்றவர்களை ஏமாற்றி வருகிறார்கள்." இவ்வாறு எழுதியிருந்தார்.

பிரச்சனையை சமாளிப்பதற்கான சிறந்த வழி அதனுடன் நேருக்கு நேர் மோதுவதுதான் என்று காந்திஜி நம்பினார். கடிதத்தில் வந்திருந்ததை 'ஹரிஜன்' ஆங்கில வார இதழிலும் அதன் இந்திப் பதிப்பான சேவக்கிலும் மேற்கோள் காட்டிவிட்டு தனது கருத்துக்களை பின்வருமாறு எழுதினார். "நான் ஏற்கனவே புதைக்கப்பட்டு விட்டேன் என்று நம்பலாமா?"

"மேலே குறிப்பிட்டுள்ள செயல்பாடுகளில் நம்பிக்கையுள்ளவர்கள் தான் எனது சீடர்கள் என்று நான் கருதுகிறேன். இந்தியாவின் கோடிக்கணக்கான கிராம மக்களுக்கு அந்த லட்சியங்களில் நம்பிக்கை இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். இருந்தாலும் அவரது குற்றச்சாட்டுகள் மிகவும் உண்மையானதுதான். காந்திய லட்சியங்களில் ஈடுபாடு மீண்டும் ஏற்பட வேண்டும் என்று அவர் ஆர்வத்துடன் எடுத்துக் கொண்ட முயற்சிகளில் கடும் சோதனைகளை அவர் சந்தித்துள்ளார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அச்சுறுத்தும் வண்ணம் கருமேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில் ஒரு சிறிய வெள்ளிக்கீற்றாவது தென்படாதா என்று இறைஞ்சிக் கேட்கும் நிலையில் அவர் இருக்கிறார்."


காந்திஜி மேலும் தொடர்ந்தார். "இந்து முஸ்லீம் ஒற்றுமையைப் பற்றி முஸ்லீம் லீக் கட்சி உறுப்பினர்களிடம் கூட மாற்றம் காணப்படுகிறது. நாம் அனைவரும் சகோதரர்கள் என்று அவர்கள் பேச ஆரம்பித்துள்ளனர். இந்துக்கள்-முஸ்லீம்கள் ஆகிய இரு பிரிவினருமே 'காதி'யை புறக்கணித்து கிராமத் தொழில்களுக்குத் தீங்கு நேர அனுமதிக்க மாட்டார்கள் என்று நாம் நம்புவோமாக. இந்துஸ்தானியை நாம் எப்படிக் கைவிட முடியும்? ஒரு முக்கிய விஷயத்தை கடிதம் எழுதியவர் மறந்துவிட்டார். தீண்டாமையையும் சாதி வேறுபாடுகளையும் அகற்றுவதன் மூலம் இந்துக்கள் தங்களை தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்துக்களை வெறுக்கும் போக்கைக் கைவிடுவதன் மூலம் முஸ்லீம்கள் தங்களை தூய்மைப் படுத்திக் கொள்ள வேண்டும்."

காந்திஜி ஸ்ரீநகரில் கழித்த கடைசி காலைப் பொழுது இன்று தான். அவரை தினமும் பிரதமர் பண்டிட் கக் சந்தித்து வந்தார். அவரது நேரத்தில் தினம் ஒரு மணி நேரத்தை அவர் எடுத்துக் கொண்டிருந்தார். அவரிடம் பிரியா விடைப் பெற்றுக் கொண்டு பயண ஏற்பாடுகளை விவரித்தார். ஜம்முவை சென்று அங்கு தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 12 மணி நேர பயணத்தை சிறிது ஓய்வுகள் எடுத்து காந்திஜியும் அவரது குழுவும் பயணத்தை தொடர்ந்தார்கள் . 

 சிறிதும் ஓய்வின்றி அவர் தொடர்ந்து கலந்து கொண்ட நிகழ்ச்சிகள், தட்ப வெப்பநிலை போன்றவற்றால் காந்திஜிக்கு ஜலதோஷம் அதிகரித்திருந்தது. இந்நிலையில் அவர் மாலை 5 மணிக்கு ஜம்மு வந்தடைந்தார். அவருடைய வருகைக்காக பெரும் மக்கள் கூட்டம் காத்திருந்தது. 77 வயதிலும் தனது உடல்நிலை எவ்வளவு மோசமாக இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாது அவர் உரையாடுவதற்காக அமைத்திருந்த மேடையை நோக்கிச் சென்றார்.

No comments:

Post a Comment